காதலுக்கும் மரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா..?
ஆம்... சினிமா காதலர்கள் சுற்றிச் சுற்றி டூயட் ஆடுவதற்கு மரம் பயன்படுமே என்று நம்மில் பலரும் சொல்வோம்.
ஆனால், இங்கே ஓர் உன்னத காதலுக்கு 25 ஆண்டுகாலமாக நிழல் தந்திருக்கிறது ஒரு மரம். அதற்கு கைமாறாக அம்மரத்தை விட்டு விலகாமல் வாழ்ந்து வருகின்றனர் அந்தக் காதல் தம்பதியர்!
ஒரு சின்ன பிளாஷ் பேக்... 25 ஆண்டுகளுக்கு முன்பு...
ரஞ்சி அருகே பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமம். அங்கே ஓர் இளம் காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். இரு குடும்பத்தாருடன் ஊரே எதிர்க்கிறது. அவ்விருவரும் ஊரை விட்டே ஒதுக்கப்படுகின்றனர்.
அந்த இளம் ஜோடி, ஊர் எல்லையிலுள்ள அரச மரத்துக்குக் கீழே சிறு குடிசை போட்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்குகிறது.
இருபத்தைந்து ஆண்டுகள் கடக்கின்றன...
இன்னும் அதே மரத்தடியின் கீழ்தான் குடித்தனம். இரண்டு மகன்களுக்கும் திருமணமும் ஆகிவிட்டது. மகன்கள் தங்களது வீட்டுக்கு அழைத்தும் அந்தக் காதல் தம்பதியர் வர மறுத்துவிட்டனர்!
தற்போது 50களை கடந்துவிட்ட மங்ரா - பல்கி ஆகியோரே அந்த தம்பதியர்!
"நாங்கள் 25 ஆண்டுகளாக இந்த மரத்துக்கு கீழேயே வாழ்ந்துவிட்டோம். எங்களுக்கு வாழ்விடம் தர எவருமே முன் வராதபோது, அன்புடன் அரவணைத்தது, இந்த மரமே. இந்த இடத்தை விட்டு எப்படி எங்களால் போக முடியும்? எங்கள் வாழ்க்கையின் நல்லது, கெட்டது அனைத்துமே இந்த மரத்தின் கீழ் தானே நிகழ்ந்தன," என்று ஆழமான குரலில் விவரித்திருக்கிறார், மங்ரா!
மங்ரா தம்பதியர் பற்றி, கிராமத்திலுள்ள கோவில் தர்மகர்த்தா கூறுகையில், "மங்ரா தம்பதியை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். இந்த 25 ஆண்டுகளில் அவர்கள் யாரிடமும் கையேந்தாமல், சுய முயற்சியில் உழைத்து வாழ்ந்து வருகின்றனர். அதோடு, தங்களது குழந்தைகளையும் சமுதாயத்தில் பெரிய ஆளாக வளர்த்துள்ளனர்," என சிலாகித்துள்ளார்.
இந்த காதல் தம்பதியரின் அன்புக்கு அடையாளமாக பிறந்த மகன்களில் ஒருவரான அஜய், "துயரம் மிகுந்த காலக்கட்டத்திலும் அன்பு மாறாமல் வாழ வேண்டும் என்பதற்கு எங்கள் பெற்றோர்களே சான்று,' என்று பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காதலுக்கும் இப்போதுள்ள காதலுக்கு வித்தியாசத்தை மங்ரா எப்படி உணர்கிறார்...?
"திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவியும் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டோம். ஆனால், ஒருவருக்கொருவர் அன்பும் அரவணைப்பும் செலுத்தி வாழ்ந்ததால், நல்லதோரு வாழ்க்கையை நடத்த முடிந்தது. 25 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகும் எங்கள் காதல் வலுவானதாகவே இருப்பதை உணர்கிறோம்." - மங்ரா.
இந்த சாதாரண மனிதர்களிடையே உள்ள அசாதாரணமான காதலுக்கு இணை வேறென்ன?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இது உண்மை நிகழ்ச்சியா - கற்பனைக் கதையா -
Post a Comment